×

மேலக்கோட்டையூரில் புதிய காவல் நிலையம் தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், கூவத்தூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மானாம்பதி, காயார், கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய 10 காவல் நிலையங்கள் இருந்தன. இவற்றில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்கள் அண்மையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டன. இந்த, 2 காவல் நிலையங்களும் எப்போதும் பிசியாகவே உள்ளன. மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் ஓஎம்ஆர் சாலையில் புதிதாக குடி வந்துள்ளதால், அவர்களுக்கான பாஸ்போர்ட் விசாரணை அறிக்கை பெறுவதற்காக தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் இந்த காவல் நிலையங்களுக்கு வருகின்றனர்.

இந்த, 2 காவல் நிலையங்களில் தாழம்பூர் காவல் நிலைய எல்லையானது முறையாக வரையறுக்கப்படாமல் உள்ளது. தாழம்பூர் காவல் நிலையம் தற்போது நாவலூரில் பழைய மாமல்லபுரம் சாலையில் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தாழம்பூர் காவல் நிலைய எல்லையில் வருகின்றன. இக்கிராமங்களுக்கு செல்ல வேண்டுமெனில் கேளம்பாக்கம் வழியாகத்தான் செல்ல வேண்டும். செல்லும் வழியிலேயே இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் எந்த புகாரையும் கொடுக்க முடியாத நிலைதான் இப்பகுதி மக்களுக்கு உள்ளது.

இதுமட்டுமின்றி, மேலக்கோட்டையூரில் தனியார் பல்கலைக்கழகம், ஒன்றிய அரசின் ஐஐஐஐடி நிறுவனம், தமிழக விளையாட்டு பல்கலைக் கழகம், தமிழக காவலர் சொந்த வீடு திட்டக்குடியிருப்பு என பல கல்வி நிறுவனங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உருவாகி உள்ளன. தனியார் வீட்டுமனைப்பிரிவுகள் ஏற்பட்டு அதிலும் ஏராளமான பொதுமக்கள் புதிதாக குடியேறி உள்ளனர். இதன் காரணமாக கண்டிகை, ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர் கிராம பொதுமக்கள் தங்களது தேவைக்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நீண்ட தூரம் பயணம் செய்து தாழம்பூர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. ஆகவே தாழம்பூர், கேளம்பாக்கம், காயார், வண்டலூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட சில கிராமங்களை பிரித்து, மேலக்கோட்டையூர் பகுதியில் புதிய காவல் நிலையம் உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேலக்கோட்டையூரில் புதிய காவல் நிலையம் தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Melakottaiyur ,Tiruporur ,Mamallapuram ,Chaturangapatnam ,Kalpakkam ,Coovathur ,Thirukkalukunram ,Manampathi ,Kayar ,Kelambakkam ,Dhalampur ,Mamallapuram road ,
× RELATED திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை